Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி. சிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 242 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினர்.
மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, பின்னர் வாழ்ந்துக் காட்டுவோம் திட்டத்தின் கீழ், திருச்செங்கோடு வட்டம், பட்லூர் தொழிற்குழுவினருக்கு விவசாய கழிவுகளிலிருந்து தேநீர் கோப்பை (டீ கப்) தயாரிக்கும் தொழில் தொடங்குவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மானிய விடுவிப்பு தொகையாக ரூ.7.63 இலட்சம் மதிப்பிலான வங்கி வரைவோலையினை வழங்கினார்.
மேலும், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியின் கீழ் மாற்றுத்திறனாளி மங்கையர்கரசி அவர்களுக்கு ரூ.5,600/- மதிப்பிலான தையல் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலவர் மு.மணிமேகலை, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளார் (பொது) த.சிவசுப்பிரமணியன் ஆகியோர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.